மீண்டும் 'சங்கரராமன்' வழக்கு: ரவிசுப்பிரமணியம் புகார்- காஞ்சி ஜெயேந்திரரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு
சென்னை: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான ரவிசுப்பிரமணியம் தமது உயிருக்கு ஆபத்து என கொடுத்த புகாரின் பேரில் காஞ்சி ஜெயேந்திரரை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஞ்சி வரதராஜபொருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு இரண்டிலும் கைது செய்யப்பட்டு இரு வழக்குகளிலும் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளித்தார் ரவி சுப்பிரமணியம். பின்னர் ரவி சுப்பிரமணியம் பிறழ்சாட்சியானார்.
இந்த வழக்கில் தொடர்புடைய தாதாக்கள் அப்பு மற்றும் கதிரவன் உயிரிழந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தன்னை அப்பு, கதிரவன் ஆகியோர்தான் பிறழ்சாட்சியாக மாறுமாறு மிரட்டினர் என்றார் ரவி சுப்பிரமணியம். மேலும் அப்படி தாம் பிறழ்சாட்சியானதால் சங்கரராமனை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட செயலை என் மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ரவி சுப்பிரமணியம் கூறியிருந்தார்.
இது குறித்து அரசு வழக்கறிஞரையும் ரவி சுப்பிரமணியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தம்மை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மிரட்டியதாகவும் தமது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி முதல்வரின் தனிப் பிரிவில் ரவி சுப்பிரமணியம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், ஜெயேந்திரர் மற்றும் அவரது ஆட்கள் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லப் போகிறாயா, உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்றும் சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என்றும் மிரட்டினர் என்றும் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயேந்திரர், ராமச்சந்திரன், போலீஸ் கண்ணன், சுந்தரேச அய்யர் ஆகியோர் தான் முக்கிய காரணம். ஆகையால் ஜெயேந்திரர், சுந்ரேசய்யர் ஆகியவர்களின் ஜாமீனை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது காஞ்சி ஜெயேந்திரரை அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.