குடியரசு தின அணிவகுப்பில் போலீஸுக்கு முதல் பரிசு... கலை நிகழ்ச்சிகளில் ஜெயின் கல்லூரி நம்பர் 1!
சென்னை: சென்னையில் நேற்று நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக காவல்துறையின் ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. 2வது பரிசை மக்கள் தொடர்புத்துறையும், 3வது பரிசை தோட்டக்கலைத்துறையின் வாகனமும் பெற்றது.
சென்னை கடற்கரை சாலையில் நேற்று குடியரசு தின விழா நடந்தது. இதையொட்டி அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடந்தது.
ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு போலீஸுக்கு
அணிவகுப்பில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் ஊர்திகளுக்கும், கலை நிகழ்ச்சிகளை நடத்தியோருக்கும் பரிசுகளும் வழங்கப்படும். அந்த வகையில் ஊர்திகளில், காவல்துறையின் ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. 2வது பரிசு செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்துக்கும், 3 வது பரிசு தோட்டக்கலைத் துறை அலங்கார ஊர்திக்கும் கிடைத்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் ஜெயின் கல்லூரி மாணவிகள்
கலை நிகழ்ச்சிகளில் வேப்பேரி ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசும், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை - அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 2வது பரிசும், எத்திராஜ் கல்லூரி மாணவிகளுக்கு 3வது பரிசும் கிடைத்தது.
கோலாட்டத்திற்கு முதல் பரிசு
மயிலாப்பூர் லேடி சிவசுவாமி அய்யர் பள்ளி மாணவிகளின் கோலாட்டத்துக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அசோக் நகர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளின் சலங்கை ஆட்டத்துக்கு 2 வது பரிசும், பிராட்வே செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்திய பள்ளி மாணவிகளின் தம்மரா நடனத்துக்கு 3வது பரிசும் அறிவிக்கப்பட்டது.
கட்சிகளின் கொண்டாட்டம்
சென்னையில் நேற்று பல்வேறு துறைகள், கட்சிகள் சார்பிலும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாநில துணை தலைவர் ஏ.நாராயணன், தேசிய கொடி ஏற்றினார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அசோக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த மாவட்ட தலைவர் கப்பல்ராஜ் தேசியகொடி ஏற்றினார். இதில் சந்தானம், வி.பி.ஐயர், புரசை நாகராஜ், சி.எஸ்.விக்டர் எம்.வைகுண்டராஜா கலந்து கொண்டனர்.
கொடியேற்றிய சோ அய்யர்
அரும்பாக்கம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறை அணிவகுப்பினை ஏற்றுக் கொண்டார். இதில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் சுந்தரவல்லி
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தேசியக்கொடியினை ஏற்றினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகுமீனா, துணை ஆணையர் (கலால்) பி.வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.