கோவையில் உலா வந்த மாவோயிஸ்ட் ஆதரவு “சாலை ஓரம்”.. போலீஸ் உஷார்
கோவை: சமீப காலமாக வெளிவராமல் இருந்த மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வரும் " சாலை ஓரம்" என்ற பத்திரிகை மீண்டும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த பத்திரிகை மாவோயிஸ்ட் இயக்கத்தோடு தொடர்புடைய மாணவ இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்பட்டது. கடந்த 2015- ஆம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவரான ரூபேஷ் மற்றும் அவரது மனைவி சரண்யா கைது செய்யப்பட்ட பிறகு பத்திரிகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் வெளிவந்துள்ளது.
சில காலம் தலைமறைவாக இருந்த அந்த மாணவ இயக்கத்தைச் சேர்ந்த நபர் தற்போது மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது உறுதி செய்யப்படாத செய்தியாக இருந்தாலும் கூட எதிர்காலத்தில் அவர் மவையிஸ்ட் இயக்கத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கோவை போலீசார் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள முக்கியமான பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யா கூறுகையில், இது போன்ற பிரசார கூட்டங்களின் மூலம் மாவோயிட்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களுடன் நெருங்கிய பிணைப்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
இந்நிலையில், ஆனைகட்டி பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நுழைந்ததாக வந்த தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.