கொடூர குற்றவாளிகளை வெளிநாடுகளுக்கு தப்பவிட்ட போலீஸ்: விஸ்வரூபம் எடுக்கும் போலி பாஸ்போர்ட் விவகாரம்
சென்னை : சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சென்னை போலீஸ் ஏட்டு தப்பவிட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மோசடி கும்பலுக்கு போலீஸ் ஏட்டு முருகன் உதவியது நேற்று கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உதவிகள் செய்த தபால் நிலைய அதிகாரி ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், பல்வேறு முக்கிய குற்ற வழக்குகளில் காவல்துறையால் தேடப்படும் நபர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்களுக்கு முழு உதவி செய்துள்ளார் உளவு பிரிவு தலைமை காவலர் முருகன். தபால் நிலைய அதிகாரி தனசேகர் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
தனிப்படையிடம் சிக்கினர்
தனசேகரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர், ராமர், யூசப் , முருகன் மேலும் தபால் நிலைய அதிகாரி தனசேகர் என பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 மெகா கிரிமினல்கள் தப்பியோட்டம்
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாஸ்போர்ட் பெற போலி முகவரி கொடுத்து போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு 15க்கும் மேற்பட்டோர் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது.
சிக்கும் உளவுத்துறை அதிகாரிகள்
அது மட்டுமில்லாமல் பல உளவு பிரிவுத்துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களின் விவரங்களையும் மத்திய உளவு பிரிவு போலீசார் தயார் செய்து வருகின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு தப்பி செல்ல இவர்கள் உதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த விவகாரத்தில் பல துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது. இதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.