இன்னும் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை... தினகரனுக்கு கைகொடுக்குமா மேலூர் பொதுக்கூட்டம்?
டிடிவி தினகரன் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேலூரில் வரும் 14ம் தேதி மதுரை மேலூரில் தொடங்கவிருக்கிறார்.
மதுரை: டிடிவி தினகரன் வரும் 14ம் தேதி மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். அதன்மூலம் அரசியல் பயணத்தை தனியாக தினகரன் தொடங்கவுள்ளார். ஆனால் மேலூர் பொதுக்கூட்டத்துக்கு இன்னமும் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் தினகரன் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளார் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக துணைப் பொதுச் செயலாளராக, சசிகலாவால் நியமிக்கப்பட்ட தினகரன், கடந்த வாரம் தன்னிச்சையாக புதிய நிர்வாகிகளை அறிவித்தது, முதல்வர் பழனிச்சாமிக்கும், அவரின் ஆதரவு அமைச்சர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
உச்சக்கட்ட மோதல்
இதையடுத்து, சென்னையில் உள்ள, அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கூடி, தினகரனின் நியமனம் செல்லாது என்றும், அவரின் நிர்வாகிகள் நியமன அறிவிப்பு செல்லாது என்றும், அவரால் கட்சியை கட்டுப்படுத்த முடியாது என்றும் அறிவித்தனர். இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
திட்டமிட்டப்படி சுற்றுப்பயணம்
இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் தினகரன் ஏற்கெனவே அறிவித்த தமிழகம் முழுவதுமான சுற்றுப்பயணம் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவரது ஆதரவாளர்கள், திட்டமிட்டபடி தினகரனின் சுற்றுப்பயணம் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.
பதிலடிக்கு ரெடி
இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், ' மேலூரில் நடக்கும் கூட்டத்துக்கு பிறகு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தினகரன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அந்தக் கூட்டம் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்' என்றார்.
முக்கியத்துவமான பொதுக்கூட்டம்
தினகரனின் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள முதல் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி நடக்கிறது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தினகரன் பங்கேற்கும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
போலீஸ் அனுமதி இல்லை
அழைப்பிதழ் அடித்து போலீஸாரிடம் அனுமதி பெறுவது வரை இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், தற்போது வரை போலீஸார் இந்த கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை.
இழுத்தடிக்கும் போலீஸ்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு பிறகு மேலூர் கூட்டத்தை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்ற வைராக்கியம் தினகரன் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மதுரை போலீசார் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் என குமுறுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.