கேரள மாணவர்களுக்கு போலி இருப்பிடச் சான்று.. விஏஓ, தாசில்தார் சிக்குகிறார்கள்!
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கேரள மாணவர்கள் சேர உதவும் வகையில் போலி இருப்பிடச் சான்றுகளை வழங்கிய விஏஓ மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில், கேரள மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வகையில், போலி இருப்பிடச் சான்றுகளை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த விஏஓ மற்றும் தாசில்தார் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்று கொடுத்து இடம் பெற்ற 9 மாணவர்கள் மீது சென்னை பெருநகரக் காவல்துறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
தேசிய அளவில் நடந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுதான் முறைகேடு செய்யும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அங்குள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலையில் உள்ளவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் நேரடியாக இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது.
அதனால் தமிழகத்தில் வசிப்பதாகக் கூறி போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர அதிகாரிகளின் துணையுடன் முயற்சி நடைபெறுகிறது. அதனை கேரளமானவர்கள் 9 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்து சிக்கியுள்ள சம்பவம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்த சிக்கலை சரி செய்ய முடியாமல் மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், போலி இருப்பிட சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரள மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய விஏஓ, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் தமிழக அதிகாரிகளை தேடும் படலத்தை தொடங்கியுள்ளனர்.