ஆளுநர் வித்யாசாகர் ராவை செப். 10ல் சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின் - கோரிக்கையை ஏற்பாரா?
ஆளுநர் வித்யாசாகர் ராவ் 10ம் தேதி மாலை 5மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் ஸ்டாலின். திமுக எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்திக்க உள்ளார் ஸ்டாலின்.
அப்போது சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி., கனிமொழி ஆகியோர் ஆளுநரை சந்தித்து தங்களின் தரப்பு கோரிக்கையை வலியுறுத்தினர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் திருவாரூரில் இருந்த காரணத்தால் ஆளுநரை சந்திக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக புதுச்சேரியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியதற்கு இது உட்கட்சி பிரச்சினை என்று கூறி வருகிறார் ஆளுநர். ஆனால் ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று ஸ்டாலின் என்று கூறி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்திக்க செப்டம்பர் 10ஆம் தேதி நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. உரிமைக்குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இந்த கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவ் 10ம் தேதி மாலை 5மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஆளுநர் சென்னை வரும்போதெல்லாம் எதிர்கட்சியினர் சந்திப்பது வாடிக்கையாகி வருகிறது. எதிர்கட்சியினர் கோரிக்கைக்கு ஆளுநர் செவி சாய்ப்பாரா? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.