தமிழகத்தை அதிர வைக்கும் ஐ.டி சோதனைகள் - அச்சத்தில் உறைந்த பா.ஜ.க பிரமுகர்கள்
வருமான வரி சோதனைகளால் விழிபிதுங்கி போயுள்ளனராம் பாஜக பிரமுகர்கள்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து வருமான வரி சோதனைகள் நடைபெறும் நிலையில் சிக்கிய நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைந்திருக்கும் பாஜக பிரமுகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களை வளைத்துப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடைபெறுகிறது என்றாலும் ஆதாயம் அடைவதில் பாஜக பிரமுகர்கள்தான் ஏராளமாம்.
தமிழக அரசின் சமூக நலத்துறையில் ஐ.சி.டி.எஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் இந்தத் துறையில் நடக்கும் டெண்டர்களை குறிவைத்து பெரும் கூட்டமே கோட்டை வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்காக சமூக நலத்துறையின் உயர் அதிகாரிகளை அணுகினாலும் அனைத்து சாலைகளும் கிறிஸ்டியை நோக்கியே என்பதைப் போல கைகாட்டப்படும். அந்தளவுக்குக் கோலோச்சிய நிறுவனத்தில் ரெய்டு நடத்தி அதிர வைத்தது வருமான வரித்துறை.
ஆளும் கட்சியினரின் வர்த்தகத் தொடர்புகளையும் இந்த நிறுவனம் கவனித்து வந்ததுதான் வருமான வரி சோதனைக்கு காரணம் என்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பிரமுகர்கள் பற்றிய விவரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனராம்.
ஊழல் பணத்தை இவர்கள் கையாளும் விதத்தைத்தான் இத்தனை நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அதன் ஒருபகுதியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை முதலே நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரர்களான நாகராஜன், செய்யாதுரை ஆகியோர் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமான துறையிலேயே மத்திய வருமானவரித்துறை நுழைந்துவிட்டதை பல பிரமுகர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.
தமிழக அரசின் லகான் பாஜகவின் கைகளுக்கு போனதுதான் தாமதம்... மேற்கு மண்டல பா.ஜ.க பிரமுகர் மற்றும் தென்மாவட்ட பாஜக பிரமுகர்கள் கோட்டையின் நட்பு வளையத்தில் இணைந்தனர். இந்த நட்பை பொருளாதாரரீதியாக பலப்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.
தலைமைச் செயலகத்திலும் இந்த முகங்கள் அடிக்கடி தென்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையின் ஒப்புதல் இல்லாமலே இவர்கள் கோட்டைக்குச் செல்கின்றனர். அரசிடம் ஆதாயம் தேடுகிறார்கள்' என பா.ஜ.க தலைமைக்கே புகார் சென்றது. பா.ஜ.க கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருப்பதால்தான், இவர்கள் நினைத்ததைல்லாம் சாதித்துக் கொண்டனராம்.
இவர்கள் சொல்லும் நபர்களுக்கே அரசின் ஒப்பந்தங்களும் கிடைத்து வந்தன. இப்போது ஐ.டி ரெய்டு நடப்பதால் ஆதாயம் அடைந்த பா.ஜ.க நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனராம். அரசின் ஒப்பந்தங்களில் பெறப்பட்ட ஆதாயங்கள் அனைத்தும் வெளிவந்துவிடும்' என்ற அச்சமும் அவர்களை வாட்டத் தொடங்கியுள்ளதாம்.