பம்பரம், டிவி, மெழுகுவர்த்தி, நட்சத்திரம்.... விரும்பிய சின்னங்களுக்காக போராடும் தமிழக கட்சிகள்
சென்னை: லோக்சபா தேர்தலில் தாங்கள் விரும்பிய சின்னத்தைப் பெற தமிழக கட்சிகள் சில போராடி வருகின்றன. இதனால் வரும் தேர்தலில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கட்சிகளுக்கு பெயர்களைப் போலவே அவற்றின் சின்னங்களும் மிகவும் முக்கியம். தேர்தலில் வாக்களுக்கும் மக்களில் பெரும்பாலானோர் சின்னங்களை மனதில் இருத்தியே குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கின்றன.
ஆனால், அங்கீகாரம் அற்றக் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதில்லை தேர்தல் ஆணையம். இதனால் தேர்தல் தோல்வியின் காரணமாக பல கட்சிகள் தங்களின் சின்னங்களைப் பறிகொடுத்துள்ளன.
அந்தவகையில் தாங்கள் இழந்த தங்களுடைய அடையாளச் சின்னத்தை மீண்டும் பெற போராடி வருகின்றன தமிழக கட்சிகள் சில....
பம்பரம் தான் வேணும்....
தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்று லோக்சபா தேர்தலைச் சந்திக்க உள்ள ம.தி.மு.க. இதற்கு முந்தைய தேர்தல்களில், பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளது. எனவே இந்த தேர்தலிலும் அச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
பம்பரத்தை பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்...
ஆனால், கடந்த சட்டசபைத் தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க.ம் கடந்த லோக்சபா தேர்தலிலும் குறைந்த சதவீத வாக்குகளையே பெற்றது. இதனால் ம.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னத்தையும் பறிமுதல் செய்தது.
பம்பரத்தை மீட்க நடவடிக்கை....
இந்நிலையில் தற்போது தேர்தல் களத்தில் உள்ள மதிமுக தனது பம்பரம் சின்னத்தை திரும்பப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது சுயேட்சைகளின் தேர்தல் சின்னங்கள் பட்டியலிலும் பம்பரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை...
இது தொடர்பாக ம.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும் போது, பம்பரம் சின்னத்தை ஒதுக்ககோரி, தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்துள்ளோம். நிச்சயம் எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கும்' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஓட்டு....
இதற்கிடையே எப்படியும் தங்களுக்கு பம்பரம் சின்னம் மீண்டும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
நட்சத்திர சின்னம்....
இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் தற்போது தேர்தல் ஆணைய பட்டியலில் நட்சத்திர சின்னம் இல்லை.
வழக்கு....
இருப்பினும் அச்சின்னத்தை தான் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மெழுகுவர்த்தி கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி...
இந்தவரிசையில் மனிதநேய மக்கள் கட்சியும் தங்களுக்கு மெழுகுவர்த்திகள் சின்னத்தை கேட்டு வழக்கு போட்டுள்ளது. இக்கட்சியின் சார்பில் தி.மு.க. கூட்டணியில் மயிலாடுமுறை தொகுதியில் ஹைதர் அலி போட்டியிடுகிறார்.
சின்னங்கள் ஒதுக்குவதில் பாராபட்சம்....
கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் தொடர்பான குழப்பம் குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறும் போது, பதிவு செய்யப்பட்ட கட்சிகளை தேர்தல் ஆணையம் சுயேச்சைகளாக பார்க்கக் கூடாது. எனவே சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
டிவி தான் வேணும்...
மேற்குறிப்பிட்ட கட்சிகளைப் போலவே, தி.மு.க. கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், தொலைக்காட்சி சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
6 ஆண்டுகள் உரிமை...
அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட சின்னத்தை பயன்படுத்திய அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தை இழந்த பின்னரும் 6 ஆண்டுகள் வரை குறிப்பிட்ட சின்னத்தை கேட்டு பெற உரிமை உள்ளது. எனவே, இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி.சி.க்கு நட்சத்திரம் கிடைக்காது....
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் கிடைக்குமா? என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணைய விதிப்படி குறைந்தது 10 சதவீத இடங்களிலாவது போட்டியிட்டால் மட்டுமே அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும். எனவே இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் கிடைக்காது'' என விளக்கமளித்துள்ளார்.
பாவம், அவங்களே கன்பியூஸ் ஆகிட்டாங்க....
தேர்தல் தேதி நெருக்கத்தில் உள்ள நிலையில் முதலில் கூட்டணி இல்லாமல் யாருக்கு வாக்குக் கேட்பது என்ற குழப்பத்தில் இருந்த சம்பந்தப்பட்ட சில கட்சிகள் தற்போது தனிப்பட்ட சின்னம் இல்லாத காரணத்தால், எந்தச் சின்னத்திற்கு வாக்குக் கேட்பது என குழப்பத்தில் உள்ளன.