அனைத்துக்கட்சி கூட்டம் : பாமக, மார்க்சிஸ்ட், சரத்குமாரின் கருத்து என்ன?
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பாமகவின் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசியதாவது : காவிரி நீர் விவகாரத்தில் நீண்ட நாட்களாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை, இன்று கூட்டப்பட்டது காலம் தாழ்ந்த கூட்டம். இருந்த போதும் ஆக்கப்பூர்வமான கூட்டமாக அமைய அரசுக்க சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறோம். காவிரி நீரானது படிப்படியாக குறைந்து 177.25 டிஎம்சியாக நிற்கிறது.
காவிரி நீர் குறைக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் சொல்கிறது. அதற்கு அதிகாரம் இல்லை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மேல் 7 நீதிபதிகள் அமர்வு, அரசியல் சாசனம் இருக்கிறது என்று அரசிடம் சொல்லி இருக்கிறோம்.
மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மேலாண்மை வாரியம் தன்னாட்சி பெற்ற அதிகாரமுள்ள ஆணையமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம் அது நடக்கும் என நம்புகிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது : 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் காவிரிப் பிரச்னையில் போராடி வருகிறோம். உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்த முடியாது என்று கர்நாடகா பிடிவாதமாக இருக்கிறது. மத்திய அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாகவே இருக்கிறது, எனவே தமிழக அரசு பிரதமரை சந்தித்து வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசியதாவது : காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காவிரியில் குறைத்த நீரின் அளவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளட்ட 3 கோரிக்கைகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இவையனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதன்முறையாக தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில் இது வரை தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்ற கருத்தை உடைக்கும் விதமாக காலை முதல் மாலை வரை அனைத்துக்கட்சி கூட்டம் நடந்துள்ளது. மக்களுக்காக அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்பது உணர்த்தப்பட்டுள்ளது, இந்த ஒற்றுமையானது மக்களின் பிற பிரச்னைகளிலும் இருக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.