அதானி குழுமத்திடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரமா?: தமிழக அரசு மறுப்பு
சென்னை: அதானி குழுமத்திடம் இருந்து மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டை தமிழக அரசு மறுத்துள்ளது. 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆதாயத்துக்காக இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 4530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக, குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத்துடன் ஜூலை 4 ஆம் தேதி தமிழக மின்சாரவாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதானி குழுமத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 7 ரூபாய் 1 காசுக்கு வாங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இதே அதானி குழுமம் ஒரு யூனிட் மின்சாரத்தை 6 ரூபாய் 4 காசுக்கு கொடுக்கிறது; தமிழக அரசு மட்டும் ஏன் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி.
மேலும் இதன் மூலம் மின்சார வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ2,800 கோடி இழப்பு ஏற்படும் என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் இதனை தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழக அரசுக்கு எதிராக எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாதவர்கள் மின்சார பிரச்சனையை கிளப்புகின்றனர். தமிழக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் தங்களைப் போல மற்றவர்களையும் கருதுகிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்வைத்துதான் அனைத்து குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.