கேரளாவில் சீரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம்...திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை: கேரளாவில் வைக்கத்தில் சீரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகாத்மா காந்தியின் நினைவாக சென்னை கிண்டியில் 18.42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவகம், மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம், பெரியவர் எம்.பக்தவத்சலம் நினைவிடம், தியாகிகளின் மணிமண்டபம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், இரட்டைமலை சீனிவாசன் நினைவகம், ‘வெள்ளையனே வெளியேறு' இயக்கப் பொன்விழா நினைவுத்தூண் ஆகியவை அமைந்துள்ளன.
காந்தி மண்டப வளாகத்தில் உள்ள புல்வெளிப் பூங்காக்கள், சுற்றுச்சுவர், உள்வட்டப்பாதை, மின்விளக்குகள் முதலியவை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டியதைக் கருத்தில் கொண்டும், கூடுதல் வசதிகள் செய்து தரும் வகையிலும் முதலமைச்சர், 12 கோடி ரூபாய் செலவில் இவற்றை உடனடியாகச் சீர்படுத்திப் புதுப்பொலிவுடன் புனரமைத்திட ஆணையிட்டார். அதன்படி, 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவரை புதுப்பித்துக் கட்டுதல், 3 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் புல்வெளி அமைத்தல், 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதைகள் மற்றும் சாலைகள் அமைத்தல், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் மின்விளக்குகள் அமைத்தல், 22 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் வசதி, 45 லட்சம் ரூபாய் செலவில் அல்லிகுளம் மற்றும் நீர் நிலைகள் அமைத்தல், 20 லட்சம் ரூபாய் செலவில் வாகன நிறுத்துமிடம், 40 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபங்களில் உள்ள பழைய புகைப்படங்களை மாற்றி புதிய புகைப்படங்கள் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுடன் 12 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ள காநதி மண்டப வளாகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
கேரள மாநிலம், வைக்கம் சிவன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் மேற்கொண்டு, சிறையிலடைக்கப்பட்ட தந்தை பெரியார் தனது தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, 1924ஆம் ஆண்டு ஆலய நுழைவுப் போராட்டத்தில் வெற்றி கண்டார்.
தந்தை பெரியார் சமூக நீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவு கூறும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க ஆணையிட்டு 31.1.1994 அன்று இந்த நினைவகம் திறந்து வைக்கப்பட்டது.
தந்தை பெரியார் நினைவிடம் 31,075 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் தந்தை பெரியார் அமர்ந்துள்ள நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள 4 அடி உயர திருவுருவச் சிலை, அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பொது மக்களின் பார்வைக்காக நிரந்தர புகைப்படக் கண்காட்சி, பெரியாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் மற்றும் செய்தித் தாள்கள் அடங்கிய நூலகம், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் மற்றும் புல்வெளியுடன் கூடிய சிறுவர் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சிக்கூடம், பார்வையாளர் மாடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்திட முதலமைச்சர் ஆணையிட்டார்.
அதன்படி, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தந்தை பெரியார் அருங்காட்சியகமும், 10 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவரும், 6 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்காவும், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடமும் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டன. கேரள மாநிலம் வைக்கத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.