பள்ளிக்கூடம் திறந்தாச்சு... உற்சாகத்துடன் கிளம்பிய மாணவர்கள்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் செம உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு கிளம்பியுள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்றரை மாத விடுமுறைக்குப் பிறகு நண்பர்களை சந்திக்கும் உற்சாகத்துடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு கிளம்பியுள்ளனர்.
2016-2017-ம் கல்வியாண்டு அரசு துவக்கப்பள்ளிகளில் ஏப்ரல் 21ஆம் தேதியும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏப்ரல் 14-ம் தேதியும் கோடைவிடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடித்து 2017-2018-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தால் கோடை விடுமுறை காலம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. புதிய வகுப்புகளுக்குச் செல்கிற உற்சாகத்தில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர்.
நீண்ட விடுமுறை போர் அடித்ததாகவும், ரொம்ப நாள் கழித்து நண்பர்களை சந்திக்கப் போவதால் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்வதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் , சீருடை உள்ளிட்ட 14 இலவசப் பொருட்கள் இன்றே வழங்கப்படும் என்று பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது.