தொடர்ந்து வரும் பண்டிகைகள்- தமிழக பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை
சென்னை: தமிழகத்தில் மிலாடி நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 24 ஆம் தேதி மிலாடி நபி, 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பில், "2015-2016 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாடி நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.