ஓ.பி.எஸ் உள்ளிட்ட 10 சீனியர் அமைச்சர்களுக்கு தேர்தலில் நோ சீட்! ஜெ. அதிரடி திட்டம்?
சென்னை: அமைச்சர்கள் பலரை கட்சிப் பணிக்கு அனுப்பி வைக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால், மூத்த அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
காமராஜர் முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்ததை கவனித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சிப் பணிக்கு செல்ல வேண்டும் என்று காமராஜர் உத்தரவிட்டார். முன்னுதாரணமாக, தானே முதல்வர் பதவியை துறந்தார்.
காமராஜர் பெயரால், அது 'கே' பிளான் என்று அழைக்கப்படுகிறது. தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் அவ்வப்போது, காமராஜர் வழியில், இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. மத்திய அமைச்சர்களாக இருந்த பலர், தேர்தல் நேரத்தில், கட்சிப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களுக்கு கல்தா
இந்நிலையில், அதிமுகவும் இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமைச்சர்களாக உள்ள பலரும், நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ.,க்களாக உள்ள பலரும் முழு நேர கட்சிப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
மேலும், வரும் தேர்தலில் சீட் கொடுக்கும்போது, 'கமிஷன்' புகார்களில் சிக்கியவர்களுக்கும், மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ளவர்களுக்கும், சீட் கொடுப்பதில்லை என்றும், சிறப்பாக செயல்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கும், இளம் வயதினருக்கும் மட்டுமே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது என, ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி பணிகள்
குறிப்பாக, கட்சியில் அனுபவம் வாய்ந்த, மூத்த அமைச்சர்கள் உட்பட, முக்கிய நபர்கள் சிலருக்கு, சீட் வழங்குவதில்லை என ஜெயலலிதா தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. சீட் கிடைக்காததால், அவர்கள் அதிருப்தி அடையாமல் இருக்க, அவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் பணியும், பின், கட்சிப் பணியும் வழங்கப்பட உள்ளதாம்.
10 பேருக்கு ஆப்பு
பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் 10 பேரை, கட்சிப் பணிக்கு அனுப்பும் விதமாக, தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சீட் இல்லை
ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, கோகுல இந்திரா, வளர்மதி, சின்னையா, முக்கூர் சுப்ரமணியன், சுந்தர்ராஜ், பூனாட்சி, எம்.சி.சம்பத் ஆகிய அமைச்சர்களுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
செய்தாலும் செய்வார்
திமுகவை போலன்றி, அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட யாருக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. திமுகவில் குறிப்பிட்ட சிலரே மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அதிமுகவில் சாமானியருக்கும் சீட் கிடைக்கும். உயர் இடத்தில் இருப்போரும் விரட்டி விடப்படுவார்கள். ஜெயலலிதாவின் இந்த குணம் தெரிந்த அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனராம்.
சாகசம் செய்யும் அமைச்சர்கள்
எப்படியும் வெற்றி பெற்று, மீண்டும் அமைச்சராகி விடலாம் என்ற கனவில் உள்ள அமைச்சர்கள் என்ன செய்ய என யோசித்து வருகிறார்களாம். தேர்தலில் போட்டியிடாவிட்டால், கட்சி பதவி இருந்தாலும், செல்வாக்குடன் வலம் வர முடியாது. எனவே, எப்படியாவது தேர்தலில் சீட் பெற்று விட வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் என்கிறது அதிமுக வட்டாரம்.