கிளம்புகிறார் 'காங்கிரஸ்' ரோசய்யா... "கிரண் பேடி" மாதிரி ஒருவரை தமிழக ஆளுநராக்க மத்திய அரசு தீவிரம்
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலம் முடியப் போகிறது. இதையடுத்து தமிழக ஆளுநர் பதவியைப் பிடிக்க பாஜக சார்பிலும், ஆர்.எஸ்.எஸ். சார்பிலும் பெயர் பட்டியல் மத்திய அரசு பறந்து கொண்டிருக்கிறதாம்.
எப்படி புதுச்சேரிக்கு பாஜகவைச் சேர்ந்த கிரண் பேடியை ஆளுநராக்கி புதுச்சேரி அரசுக்கு குடைச்சல் தரப்படுகிறதோ அதே வேலையை தமிழகத்திலும் செய்ய பாஜக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய ஆளுநர் நியமனத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே மோதல் இருந்தாலும் கூட இருவருக்கும் பொதுவான, பொருத்தமான நபரே ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பழைய தலைவர்
அகில இந்திய அளவில் மிகப் பழைய காங்கிரஸ் தலைவர்களில் ரோசய்யாவும் ஒருவர். நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர். அதேசமயம் அமைச்சராகவே பல காலத்தை கழித்த தலைவரும் கூட.
அமைச்சர் பதவியில் சாதனை
நேரு முதல் பல பிரதமர்களுடன் நெருங்கிப் பழகிய தலைவர் ரோசய்யா. பல காலம் அமைச்சர் பதவியில் இருந்து சாதனை படைத்தவர். அதிலும் நிதியமைச்சராக ஒரு சாதனையும் இவரிடம் உண்டு.
பட்ஜெட் போடுவதில் சாதனை
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் நிதியமைச்சராக 16 முறை இவர் இருந்துள்ளார். 16 பட்ஜெட் போட்டுள்ளார். அதிலும் 7 பட்ஜெட்டை தொடர்ந்து போட்டுள்ள சாதனையாளர். இது இந்திய அளவில் ஒரு சாதனையாகும். சென்னா ரெட்டி, விஜய பாஸ்கர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ராஜசேகர ரெட்டி ஆகியோரிடம் நிதியமைச்சராக இருந்தவர் ரோசய்யா.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக 1994ம் ஆண்டு முதல் 1996 வரை பதவி வகித்துள்ளார் ரோசய்யா. கட்சித் தலைவர் பதவியை விட நிதியமைச்சர் பதவியில்தான் ரோசய்யா ஆந்திர மக்களால் பாராட்டப்பட்டவர் ஆவார்.
முதல்வர் ரோசய்யா
ராஜசேகர ரெட்டி மரணத்திற்குப் பின்னர் ரோசய்யா இடைக்கால முதல்வராக பதவி வகித்தார். ஆனால் உட்கட்சிப் பூசலால் இவரால் நீண்ட காலம் முதல்வர் பதவியில் நீடிக்க முடியவில்லை. உடல் நிலையைக் காரணம் காட்டி இவரை காங்கிரஸ் மேலிடம் ராஜினாமா செய்ய வைத்து விட்டது.
தமிழக ஆளுநர்
அதன் பின்னர் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி தமிழக ஆளுநராக இவரை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நியமித்தார். அன்று முதல் தமிழக ஆளுநராக இருந்து வருகிறார் ரோசய்யா.
ஆகஸ்ட்டில் முடிவுக்கு வருகிறது
ரோசய்யாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் அதாவது ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான வேலைகள் தொடங்கியுள்ளன.
அடுத்த ஆளுநர் யார்?
அடுத்த ஆளுநராக தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்காக வட மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக நிர்வாகி ஒருவரை தேர்வு செய்துள்ளனராம். அதேசமயம், ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஒரு லிஸ்ட் வந்துள்ளதாம். அதையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
கிரண் பேடி மாதிரி
புதுச்சேரியில் கிரண் பேடியை ஆளுநராக்கி முதல்வர் நாராயணசாமியுடன் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. அதே போல தமிழகத்திலும் ஒரு பாஜக தலைவரா ஆளுநராக்கி மத்திய அரசு விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் "அம்மா"விடம் அது நடக்குமா?.. என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாகும்.