தமிழகத்தில் 20 ஆண்டுகளில் துப்புரவு பணியின்போது 156 தொழிலாளர்கள் சாவு
சென்னை: தமிழகத்தில் சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் 156 பேர் கடந்த 20 வருடங்களில் பணியின்போது உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளன.
சாக்கடை அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து சென்னையிலுள்ள குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு
அந்த மனுவில் "நடப்பாண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், 1993ம் ஆண்டுக்கு பிறகு நடந்த பணியிட விபத்துகளில், உயிரிழந்த கழிவகற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 156 பேர்
அதன்படி, தமிழகத்தில் 1993க்கு பிறகு பணியிடத்தில் நடந்த விபத்துகளில் 156 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இது மீடியாக்களில் வெளியான செய்தி அடிப்படையிலான புள்ளி விவரமாகும்.
அதிக உயிரிழப்புக்கு வாய்ப்பு
ஒருவேளை இதைவிட அதிகமாகவும் தொழிலாளர்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.
புள்ளி விவரம்
எனவே அரசு அதிகாரிகள் உயிரிழந்த தொழிலாளர்கள் குறித்த முழு புள்ளி விவரத்தையும் தயார் செய்து, அவர்கள் குடும்பங்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.