பருவமழை இந்த ஆண்டும் ஏமாற்றுமோ... குடிநீரின்றி தவிக்கும் தென் மாவட்டங்கள்
பருவமழை ஏமாற்றி வருவதால் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவித்து வருகின்றனர் தென் மாவட்ட மக்கள்.
நெல்லை: கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் தென் மாவட்ட அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையும் சரியாக பெய்யாத காரணத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இப்போதே பொதுமக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தென் மேற்கு பருவமழை காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் பலத்த காற்றும், இதமான லேசான தூறலும் அவ்வப்போது இருக்கும். அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆறாக பெருகி அணைகளில் தேங்கும்.
இதனால் முன்று மாதத்திற்கு தேவையான குடிநீர் அணைகளில் தேங்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீசன் ஏமாற்றியதால் தண்ணீர் வரத்தின்றி அணைகள் வறண்டு கிடக்கின்றன.
தென்மேற்கு பருவமழை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியான அளவில் மழை பெய்யாத காரணத்தினால் நெல்லை மாவட்டங்களில் அணைகள் கடந்த ஆண்டு நிரம்பவில்லை. இதனால் கோடை காலத்திற்கு முன்பாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. பல பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரிந்து வருகின்றனர்.
மழையை காணோமே
இந்நிலையில் இந்தாண்டு பருவமழை குறிப்பிட்ட காலத்தில் துவங்கினாலும் ஒரிரு நாளில் முடிந்து விட்டதாகவே தெரிகிறது. மழையே பெய்யவில்லை. அதற்கு ஏற்றார் போல் தற்போது தென் மாவட்டங்களில் பலத்த காற்று மட்டுமே வீசுகிறது. ஆனால் மழை முற்றிலும் இல்லை. இதனால் இந்தாண்டும் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொய்துப்போன மழை
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் பொய்த்துப்போனால் குடிநீருக்கு மக்கள் அல்லாடவேண்டியிருக்கும். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பெய்யுமா என்பது அக்டோபர் மாதம்தான் தெரியும்.
20 ஆண்டுகளுக்குப்பின் அதே நிலை
தென் மாவட்டத்தை பொறுத்தவரை இத்தகைய நிலையை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் தான் பார்க்க முடிந்தது. அப்போது குடிநீர் கிடைக்காமல் சென்னையை போன்று லாரிகளில் தண்ணீர் கொண்டு அனைத்து ஊர்களிலும் வார்டு வார்டாக வினியோகம் செய்தனர். அதன் பிறகு நிலைமை சீரானது. அதற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டாகதான் இந்த நிலை நீடிக்கிறது. என்ன செய்ய போகிறது அரசு என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.