சபாநாயகர் தனபாலின் சொந்த தொகுதி பயணம் திடீர் ரத்து.. மக்கள் கோபம் எதிரொலி?
சசிகலா அணிக்கு ஆதரவு அளித்ததற்கு சபாநாயகரும், அவிநாசி தொகுதி எம்எல்ஏவுமான தனபாலுக்கு கடும் எதிர்பபு கிளம்பியதை அடுத்து அவரது அவிநாசி பயணத்தை ரத்து செய்தார்.
கோவை: தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவு அளித்ததற்கு கோவை மாவட்டம், அவிநாசி தொகுதி எம்எல்ஏ-வும் சபாநாயகருமான தனபாலுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதால், சொந்த தொகுதி செல்வதற்கான பயணத்தை அவர் ரத்து செய்தார்.
அதேபோல் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி எம்எல்ஏ-வுமான ஜெயராமனுக்கும் எதிர்ப்பு நிலவியதால் அவரும் தனது பயணத்தை ரத்து செய்தார்.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்காமல் கூவத்தூர் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த எம்எல்ஏ-க்கள், சொந்த தொகுதிக்கு வருவதற்கு அந்தந்த தொகுதி மக்கள் தற்போது பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் அவிநாசியில் உள்ள அவரது அலுவலகத்தின் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று அவரது சொந்த தொகுதிக்கு செல்ல கோவை விமானம் நிலையத்துக்கு வந்த அவரை சசிகலா அணியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று கோரி எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனது அவிநாசி பயணத்தை ரத்து செய்தார். அதே போல் கோவை விமான நிலையம் வந்த பொள்ளாச்சி ஜெயராமனும் தனது பயணத்தை ரத்து செய்தார்.