தமிழகம், புதுவையில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது - 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து ஆயிரத்து 140 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
Recommended Video
சென்னை: தமிழகம், புதுவையில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. இரு மாநிலங்களிலும் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். பொதுத்தேர்வுக்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேர். மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேர். பள்ளி மாணவ-மாணவிகள் தவிர தனித்தேர்வர்களாக 36,649 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு கூடுதலாக 237 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க 6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிட் அடித்தல், காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுவது உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.