வாவ்... ரூபாய் நோட்டு விவகாரம்... மக்களுக்காக போராட்டத்தில் குதித்த வேளாண்மை வங்கி ஊழியர்கள்!
மக்களிடம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதிக்க கோரி தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திண்டுக்கல்: பொதுமக்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதி கோரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது; டிசம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் கொடுத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்பது மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால் தமிழகத்தில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை வாங்கக் கூடாது என தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்களுக்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உத்தரவிட்டிருந்தது.
இதனால் கடந்த 1 வார காலமாக கிராமப்புறங்களில் தொடக்க வேளாண்மை வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை. அனைத்து கிராமப்புற வங்கிகளிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பதால் தொடக்க வேளாண்மை வங்கிகளுக்கு படையெடுத்து பொதுமக்கள் ஏமாந்தே வருகின்றனர்.
இந்த நிலைமை நீடித்தால் கிராமங்களில் தொடக்க வேளாண் வங்கிகள் இனி செயல்பட முடியாத நிலைமை உருவாகும் என்பது ஊழியர்களின் கருத்து. இதனால் தங்களையும் பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் வாங்கவும் அவர்களுக்கு மாற்று பணத்தை கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு தொடக்க வேளாண் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று போராட்டம் நடத்தினர்.
சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.