அம்மாவுக்கு பயந்து டெங்கு கொசுவெல்லாம் டெல்லியிலே இருக்குண்ணு சொன்னீங்களே அமைச்சரய்யா?
சென்னை: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் பேசினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் சென்னைவாசிகளை கடுமையான அவதிக்கு உள்ளாக்கி வருகிறது டெங்கு காய்ச்சல். மர்மகாய்ச்சல் என்று கூறி டெங்கு பற்றிய உண்மைகளை மறைத்து சிகிச்சை அளிக்கின்றனர் மருத்துவர்கள்.
குமரி தொடங்கி சென்னை வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக காய்ச்சலுக்கு மடிய, டெங்குவிற்கு கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 96 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் மட்டுமே இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது சென்னை மாநகராட்சி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 3,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், பல ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்த்தாலே தெரியும். இதை மர்மக் காய்ச்சல் என்று கூறி டெங்குவின் உண்மையான பாதிப்பை மறைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் அடையாறு மண்டலத்தில் 50 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அண்ணா நகர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. வடசென்னை பகுதிகளான தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.
இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 10 பேரும், குழந்தைகள் நல பிரிவில் 5 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு கசாயமும் கொடுக்கப்படுகிறது. அவர்களை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது. திருத்தணியில் கொத்துக்கொத்தாக காய்ச்சலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனையில் கொசுவலைகூட இல்லையாம். எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்று அங்கு ஆய்வுக்குப் போன அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தெரியவந்துள்ளது.
டெங்கு கொசு டெல்லியில் மட்டுமே இருப்பதாகவும், அம்மா ஆட்சியில் கொசு கூட தமிழகத்திற்கு வர அச்சப்படுவதாகவும் சட்டசபையில் பேசி ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களிடம் அப்ளாஸ் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உண்மை கொஞ்சம் உரைக்கத்தான் செய்தது. இதனையடுத்தே தற்போது போர்கால நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டுமுதல் 2015 வரை டெங்கு காய்ச்சலுக்கு 99 பேர்வரை உயிரிழந்துள்ளனர். இதில் 2012ம் ஆண்டுதான் அதிக அளவாக 12,826 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். 2013ம் ஆண்டு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வினால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை டெங்குவிற்கு 2965 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
டெங்கு காய்ச்சல் உயிர்கொல்லி நோயாக இருந்தாலும் அதைக் குணப்படுத்தலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கான வசதிகள் உள்ளன. இதன்காரணமாக டெங்குவால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. கொசு ஒழிப்பில் உள்ளாட்சி அமைப்புகள் அக்கறை செலுத்தினால் டெங்குவை முற்றிலும் தடுத்துவிடலாம் என்று மருத்துவர்கள் தைரியம் சொன்னாலும், கொசு கடித்தாலோ, அதனால் காய்ச்சல் வந்தாலோ அஞ்சத்தானே வேண்டியிருக்கிறது.
அமைச்சரய்யா... இப்பவும் டெங்கு கொசு டெல்லியிலதான் இருக்கா? கொஞ்சம் எந்திரன் ஸ்டைலில் கொசுக்கள் கிட்ட கேட்டு சொல்றீங்களா?