அகில இந்திய சி.ஏ., தேர்வில் தமிழக மாணவர் ஸ்ரீராம் முதலிடம் !
சென்னை: அகில இந்திய பட்டய கணக்காளர் (சி.ஏ.) இறுதித் தேர்வில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சி.ஏ. தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.icai.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதில், தமிழகத்தின் சேலம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரின் மகன் ஸ்ரீராம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 800-க்கு 613 மதிப்பெண்கள் (76.63 சதவீதம்) பெற்றுள்ளார். இவரது தாயார் நூலகராக பணியாற்றி வருகிறார்.
இது குறித்து ஸ்ரீராம் கூறுகையில், லட்சிய படிப்பில் முழுகவனம் செலுத்தி படித்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. தினமும் 2 மணிநேரம் மட்டும்தான் படிப்பேன். என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு படித்தால் இந்த வெற்றி கிடைத்ததாக கூறினார்.
அதேபோல், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கட விஸ்வ உபேந்திரா 610 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்த யாஷ் மனோஜ் குமார் கோயல் 599 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
சி.ஏ. தேர்வில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடம் பிடித்தார். இவர் 800க்கு 595 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.