தமிழக மாணவர்களை பாக்., சீனா எல்லைகளில் போய் நீட் தேர்வு எழுத சொல்லுவது என்ன மாதிரியான குரூரம்?
பாகிஸ்தான், சீனா எல்லைகளில் உள்ள மாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத பாகிஸ்தான், சீனா எல்லைகளுக்கு அனுப்பி வைப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் எனும் நாசகார தேர்வே வேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கை. இந்த நீட் தேர்வை எதிர்த்துதான் மாணவி அனிதா தூக்கிட்டு மாண்டு போனார்.
ஆனால் தமிழர்களின் மரணங்களை துச்சமாகத்தான் மத்திய பாஜக அரசு கருதுகிறது. தற்போது நீட்டை திணித்ததுடன் மேலும் கொடூர வஞ்சகத்தை அரங்கேற்றியிருக்கிறது.
நீட் எழுதும் 1.10 லட்சம் மாணவர்களில் 5371 பேருக்கு கேரளாவின் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு 2,000 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கிற பாகிஸ்தானின் எல்லையில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்துக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2,300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சீனா எல்லையான சிக்கிம் மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் யுத்தத்துக்கு செல்வதைப் போல எல்லைகளுக்கு அனுப்பி வைத்து ரசிக்கும் மத்திய பாஜக அரசின் குரூரத்தை எப்படி சகிக்க முடியும்?
இதைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழ்நாட்டு அரசோ வாய்மூடி மவுனியாக பல்லைக் காட்டிக் கொண்டு ரூ1,000 நிதி உதவி தருகிறதாம். கிராமங்களை விட்டு மாவட்ட தலைநகரங்களைக் கூட எட்டிப்பார்க்காத ஏழை மாணவர்களை அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு துரத்துவதை எப்படி மன்னிக்கத்தான் முடியும்?
திபெத்தில் இருந்து அகதியாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் எல்லாம் சொகுசாக தனி ராஜ்ஜியங்களுக்குள் கல்வி கற்க முடிகிறது. ஆனால் இந்த தேசத்தின் மண்ணின் மைந்தர்களாக இத்தனை காலம் வாழும் தமிழ்நாட்டு மாணவர்களை அகதிகளைவிட மிக மோசமாக மத்திய பாஜக அரசு நடத்துகிற வஞ்சகத்தை கண்டும் காணாமலும் எப்படித்தான் கடக்க முடியும்?
தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகத்தான் மத்திய பாஜக அரசு நடத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு எதனையும் சொல்ல முடியாது! இது தமிழ்நாட்டு மக்களின் ஏற்படுத்தப் போகும் எதிர்விளைவுகளுக்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பு!