இலங்கையில் தமிழர்கள் உயர் கல்வி பெறுவதைத் தடுத்த 'தரப்படுத்துதல்' திட்டத்தை நினைவூட்டும் 'நீட்'
மத்திய அரசின் நீட் தேர்வானது இலங்கையின் கல்வி தரப்படுத்துதல் திட்டத்தை எதிரொலிக்கிறது.
சென்னை: தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு. நீட் தேர்வை திணித்த கையோடு அண்டை மாநிலங்களில்தான் தமிழக மாணவர்கள் எழுத வேண்டும் என்கிறது.
தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டி காவிரி டெல்டாவை பாலைவனமாக்கிவிட்டது மத்திய அரசு. இப்போது தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு முடிவுரை எழுதுகிறது மத்திய அரசு.
நீட் எனும் நாசகார தேர்வை தமிழர்கள் மீது திணித்த கையோடு அண்டை நாடுகளின் எல்லைகளில் போய் தேர்வு எழுதுங்கள் என துரத்துகிறது. தற்போதைய தமிழகத்தின் இந்த நிலையானது 1970களில் இலங்கையில் தமிழர்கள் உயர் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையிலான கல்வி தரப்படுத்துதல் திட்டத்தை அப்படியே அப்பட்டமாக எதிரொலிக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் உயர் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் தரப்படுத்துதல் சட்டம். 1972-ம் ஆண்டு கல்வி தரப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. மருத்துவ படிப்பு படிக்க தமிழராக இருந்தால் 250 மதிப்பெண்கள்; சிங்களராக இருந்தால் 229 மதிப்பெண்கள் போதும்.
மேலும் தகுதி அடிப்படையில் 30% இடம்தான் ஒதுக்கப்படும். 55% இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் சிங்களர், தமிழருக்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய 15% இடங்கள் கல்வி ரீதியாக பின் தங்கிய மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இதனால் இலங்கையில் தமிழர்கள் கல்லூரிகளில் படிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது. இந்த தரப்படுத்துதல் திட்டத்தை தந்தை செல்வா உள்ளிட்டோர் அறவழி கிளர்ச்சிகளை நடத்தினர். அது பலனளிக்காமல் போனதால்தான் ஆயுதப் போராட்டம் எழுந்தது என்பது வரலாறு.