வரலாறு காணாத வெப்பம்... இன்னும் அதிகரிக்கும்... ஜாக்கிரதை மக்களே!!
தஞ்சை, மதுரை,நாகை, தருமபுரி, கடலூர் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தஞ்சை, மதுரை,நாகை, தருமபுரி, கடலூர் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
நூறு ஆண்டுகளில் இல்லாத மழையை சென்னை கடந்த 2015 ஆம் ஆண்டு சந்தித்தது. பெருநகரம் முழுவதும் வெள்ளக்காடானது. கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி தமிழகத்தை வாட்டி வதைத்தது.
இந்த ஆண்டு நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. சென்னையில் நேற்று 110 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெப்பம் பதிவானது.
நூற்றாண்டில் இல்லாத வெப்பம்
மாநிலத்தின் இரண்டாவது அதிக பட்ச வெப்பநிலையாக, சென்னை, மீனம்பாக்கத்தில்,109 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னையில் 1908ஆம் ஆண்டு 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது. அதுவே, இதுவரை பதிவான அதிக பட்ச வெப்பநிலையாகும்.
வெப்ப அலை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட குறிப்பிடப்பட்ட 18 மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இது பொதுமக்களை மேலும் அச்சுறுத்தியது. வாட்ஸ் அப்பில் வதந்தி வேகமாக பரவியது அதில் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் பரவி பீதிக்கு ஆளாக்கியது.
வீட்டை விட்டு வெளியே வராதீங்க
118 டிகிரி எல்லாம் பதிவாகாது வதந்தியை நம்ப வேண்டாம், வெப்ப அலை வீசுவது உண்மை என்பதால் பகல் நேரங்களில் குறிப்பாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். பருத்தி ஆடைகளை மட்டுமே அணியுங்கள் என்றும், டீ, காபி குடிக்காதீங்க மக்களே... கூழ், மோர், இளநீர் குடிங்க மக்களே, காரமா சாப்பிடாதீங்க என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள், முதியவர்கள்
வெயில் அதிகம் பாதிப்பது குழந்தைகள், முதியவர்களைத்தான் எனவே வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிகம் தண்ணீர் குடியுங்கள், வெளியில் சென்றாலே தண்ணீர் பாட்டிலுடன் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
செல்லப்பிராணிகள் ஜாக்கிரதை
மனிதர்களே இந்த வெயிலுக்கு சுருண்டு விழுகிறார்கள். செல்லப்பிராணிகள் பாவம் என்ன செய்யும் எனவே வெயிலுக்கு இதமாக செல்லப்பிராணிகளை கவனியுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
வெப்பம் அதிகரிக்கும்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நீடிக்கும் என்று தெரிவித்தார். தஞ்சை, மதுரை,நாகை, தருமபுரி, கடலூர் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளை விட இன்று தமிழகம் முழுவதும் அதிக வெப்பநிலை நிலவுகிறது என்று கூறினார்.