தெறிக்க விடுறோம்.. உற்சாகத்தில் "முரட்டுக் காளைகள்"..விறுவிறுப்புக்குக் காத்திருக்கும் வாடி வாசல்கள்
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தென் மாவட்டங்களில் பெரும் உற்சாகத்தையும், கொண்டாட்ட மன நிலையையும் கொண்டு வந்து விட்டது. இப்போதே அங்கு பொங்கல் களை வந்து விட்டது. பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்தாமல் மிகப் பெரும் சோகத்தில் மூழ்கியிருந்த தென் மாவட்ட கிராமங்களில் தற்போது உற்சாக அலை வீச ஆரம்பித்துள்ளது. பல கிராமங்களில் மக்கள் உற்சாகமாக காணப்படுகின்றனர்.
மத்திய அரசின் உத்தரவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்ற போதிலும் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளிலும் மக்கள் குதித்து விட்டனர்.
பாரம்பரியம்
தமிழர்களின் வீர விளையாட்டு, பாரம்பரியம் ஜல்லிக்கட்டு. ஆதி தமிழ்க் கூட்டம் நடத்தி வந்த இந்த வீர விளையாட்டு இன்று வரை தொடர்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு தடை போட்டு விட்டது சுப்ரீ்ம் கோர்ட்.
காங். அரசு செய்த காரியம்
அந்தத் தடைக்கு கடந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அரசாணைதான் காரணம். காளைகளை காட்சி விலங்குகளின் பட்டியலிலிருந்து நீக்கியதால் வந்த வினை அது. இதனால் கடந்த ஆண்டு போட்டியை நடத்த முடியாமல் போனது.
இருண்டு போன கிராமங்கள்
இதனால் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தென் மாவட்ட கிராமங்களில் களை இழந்தது. பலர் பொங்கலே கொண்டாடவில்லை. உண்ணாவிரதம், கருப்புக் கொடி கட்டுவது என துக்கம் அனுசரித்தனர்.
இந்த ஆண்டு
இந்த நிலையில் இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற வேண்டும் என்பதில் கிராமத்தினர் தீவிரமாக இறங்கினர்.
கட்சிகளின் ஆர்வம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்த முறை அரசியல்வாதிகளும் கட்சி பாகுபாடின்றி தலையிட்டனர். அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ஜவடேகர் மூலமாக பொன். ராதா அறிவிப்பு
இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளதாக அமைச்சர் ஜவடேகர் தன்னிடம் கூறியதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
உற்சாகம்
இந்தத் தகவல் தென் மாவட்ட கிராமங்களில் பெரும் உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது. பல ஊர்களில் மக்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தெறிக்க விடுறோம்
பேஸ்புக்கிலும் ஜல்லிக்கட்டு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் சீறிப் பாய்கின்றன. தெறிக்க விடுறோம் என்ற வாசகத்துடன் மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தயாராகும் கேலரிகள்
பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான கேலரிகளை அமைக்கும் பணிகளும் தொடங்க விட்டன. வாடி வாசல்களையும் வெள்ளை அடித்துத் தயார்படுத்தி வைத்து வருகின்றனர்.
பூரிப்பில் அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூர்,. பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாடி வாசல் முன்பு பட்டாசு
அலங்காநல்லூரில் உள்ள வாடி வாசல் முன்பு மக்கள் திரண்டு வந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.