எத்தனையோ எதிர்பார்த்த தமிழகம்...மொத்தமாக பட்டை நாமம் போட்ட ரயில்வே பட்ஜெட்!
சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் முற்று முழுதாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். தமிழகம் எத்தனையோ ரயில் திட்டங்களுக்காக காத்திருக்கும் நிலையில் ஏதோ 6 ரயில்களை அறிவித்துவிட்டு பட்டை நாமம் போட்டுவிட்டனர் என்பதே பயணிகளின் புலம்பல்.
ரயில்வே பட்ஜெட்டில் அன்னிய முதலீடு, தனியார் முதலீடு, பாதுகாப்பு அம்சங்கள் என பலவும் இடம்பெற்றிருந்தன. புல்லட் ரயில் அறிவிப்பெல்லாம் கூட இருந்தன.
தமிழகத்துக்கு மொத்தம் 6 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1) சாலிமார்- சென்னை;
2) ஜெய்ப்பூர்- மதுரை;
3) அகமதாபாத்- சென்னை;
4) சென்னை- விசாகப்பட்டினம்;
5) பெங்களூர்- ஓசூர்;
6) கான்பூர்-நாக்பூர்-மைசூர்-பெங்களூர்- சென்னை
ஆகிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் தமிழகம் எதிர்பார்த்தது எத்தனை எத்தனையோ ரயில்கள்.. திட்டங்கள்
மதுரை- குமரி
மதுரை - கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதை திட்டம் பற்றி மூச்சே கிடையாது. இத்தனைக்கும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியான பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்.
கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களுக்கு காலை முதல் மாலை, வரை தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது அடுத்த கோரிக்கைகளில் ஒன்று. இதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.
மதுரை- சென்னை
மதுரையிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. இன்றைய பட்ஜெட்டிலும் இதற்கு விடை கிடைக்கவில்லை.
மதுரை- சென்னை ஜனசதாப்தி
மதுரையிலிருந்து சென்னைக்கு பகலில் 6 மணி நேரத்தில் செல்லும் வகையில் ஜனசதாப்தி ரயிலை இயக்க வேண்டும் என்பது தென்மாவட்டவாசிகளின் ஆவல். இதுவும் நிறைவேறவில்லை.
தென் - வடமாவட்ட இணைப்பு
தென்மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகியவற்றை இணைத்து சென்னைக்கு புதிய தினசரி ரயில் ஒன்றைய இயக்க வேண்டும் . அதாவது தென்மாவட்டங்களையும் வடமாவட்டங்களையும் இணைக்கும் வகையிலான ரயில் இயக்க வேண்டும் என்பதும் முதன்மை கோரிக்கை. இதேபோல் கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயிலையும் தினசரி ரயிலாக்கலாம் என்பதும் வேண்டுகோள். இது பற்றியும் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை.
டெல்லிக்கு தினசரி ரயில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் நிஜாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பதும் கோரிக்கை.
மதுரை- பெங்களூர்
மதுரையில் இருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.
தினசரி ரயில்கள்
நாகர்கோவில் - ஹைதராபாத் வாராந்திர ரயில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர ரயில் ஆகியவற்றை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். தென்காசி- கோவை வாராந்திர சிறப்பு ரயிலையும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்ற எந்த ஒரு கோரிக்கையுமே நிறைவேறவில்லை.
சென்னையில் இருந்து..
சென்னை - அமிர்தசரஸ், சென்னை போர்பந்தர் வாராந்திர ரயில், சென்னை - மங்களூரு இடையே பெங்களூரு வழியாக தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பதும் பயணிகள் கோரிக்கை. இதில் சென்னை- அகமதாபாத் ரயில் என்ற ஒரு அறிவிப்புதான் வந்துள்ளது.
கோவையிலிருந்து
கோவை - சென்னை இடையே தினசரி கூடுதல் இரவு நேர ரயில், கோவை - மதுரை தினசரி ரயில் ஆகியவை கோவைவாசிகளின் கோரிக்கைகளில் ஒன்று. இதுபற்றியும் எதுவுமே இல்லை.
திருச்சியிலிருந்து..
திருச்சி - பெங்களூரு தினசரி இரவு நேர, பகல் நேர இன்டர்சிட்டி ரயில், திருச்சி - மும்பை தினசரி ரயில், திருச்சி - அகமதாபாத் வாராந்திர ரயில் ஆகியவை திருச்சிவாசிகளில் கோரிக்கைகள்.
இப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் எந்த ஒரு கோரிக்கையுமே நிறைவேற்றப்படவே இல்லை. இதனால் தமிழக மக்கள் கடுமையாக ஏமாற்றம் அடைந்துள்ளனர்.