வீட்டில் கிறிஸ்துமஸ் தோரணம் அமைத்த வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு
தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே கிறிஸ்துமஸ் தின அலங்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம் தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் ஜெரோம் (31). கூலித் தொழிலாளியான இவர் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக, தனது வீட்டில் மின் விளக்குகள்,தோரணங்கள் அமைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், மின்கம்பி வயர்களில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்பாராத விதமாக வாலிபர் ஜெரோம் உடலில் மின்சாரம் பாய்ந்ததில், அவர் அதேஇடத்தில் மயங்கி கீழே விழுந்தாராம். அருகேயுள்ளவர்கள் சிலர் ஓடிவந்து பார்த்து, அவரை எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெரோம் உயிரிழந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.