காவிரிக்காக உண்ணா விரதம்.. விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலுக்கட்டாயமாக கைது
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்த்ததையடுத்து தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் தமிழகத்தில் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில், இன்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் உண்ணா விரதம் நடைபெற்றது.
உண்ணாவிரதத்தையடுத்து, தமிழகத்தில், போராட்டத்தின் வீரியம் அதிகரித்தது. இதை உணர்ந்த காவல்துறை, அனுமதியின்றி உண்ணாவிரதம் இருப்பதாக கூறி பி.ஆர்.பாண்டியன் மற்றும் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இரவு கைது செய்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.