வேட்டிக்கு அனுமதி- தமிழக அரசின் முடிவை ஏற்றுக்கொள்வோம் - என்.சீனிவாசன்
சென்னை: கிளப்புகளில் வேட்டி கட்டியோரை அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொள்வதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனுமான என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மனாக பொறுப்பேற்ற முதல் இந்தியரான என்.சீனிவாசனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்தான் வேட்டி கட்டி வந்ததற்காக நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அனுமதி மறுக்கப்படவில்லை. இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்து தமிழக அரசு எச்சரிக்கையும் விடுத்தது.
சீனிவாசனுக்கு பாராட்டு விழா நடைபெற்று முடிந்த பின்னர், வேட்டி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது, கிரிக்கெட் கிளப்பில் வேட்டிக்கு தடையால் சர்ச்சை கிளம்பிய போது நான் இங்கு கிடையாது. பெரும்பாலான கிளப்களில் உள்ள நடைமுறையை தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பும் கடைப்பிடித்து வருகிறது.
இந்த விஷயத்தில் தமிழக முதல்வரின் கருத்தையும், தமிழக அரசின் முடிவையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றார்.