பாரத் பந்த்: திமுகவுடன் சேராமல் நாளை "தனி ஆவர்த்தனம்" நடத்தப் போகும் திருநாவுக்கரசர்
பண ஒழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனியாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை: ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சி தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பணம் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து நாளை போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
நாளை காலை 10.30 மணி அளவில் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அருகில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரா.மனோகர், ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், எம்.பி. எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளதாகவும், காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென காங்கிரஸ் தனி ஆவர்த்தனம் செய்யும் என்று அறிவித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டாக ஆர்பாட்டம் நடத்தினால் நமக்கு பேச வாய்ப்பு கிடைக்காது, அதே நேரத்தில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினால் மத்திய அரசுக்கு எதிராக பேசும் கண்டன பேச்சுக்கள் ஊடகங்களில் பதிவாகும், தலைமைக்கும் தெரியவரும் என்பதாலேயே தனியாக ஆர்பாட்டம் நடத்த திருநாவுக்கரசர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.