காமராஜ் அறக்கட்டளையிலிருந்து ஜெயந்தி நடராஜன், வாசன் விலகல்... அவர்களுக்குப் பதில் புதிதாக யார்?
சென்னை : காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் விலகியதால் காமராஜ் அறக்கட்டளைக்கு இரண்டு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு 5 பேர் நிர்வாகிகளாக உள்ளனர். இதில், மாநில காங்கிரஸ் தலைவர் நிர்வாக அறங்காவலராகவும் 4 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த அறக்கட்டளை தான் சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை பராமரித்து வருகிறது.
இந்த அறக்கட்டளையில் இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், யசோதா, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்தனர். இவர்களில் ஜி.கே.வாசன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கி விட்டார்.
சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் இருந்து விலகினார். இதனால், காமராஜ் அறக்கட்டளையின் இரண்டு நிர்வாகிகள் குறைந்துள்ளனர். எனவே, காலியாக இருக்கும் 2 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை நியமிப்பது பற்றி காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
இன்று மாலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் தலைமையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களான ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், மணி சங்கர் அய்யர், தங்கபாலு, பிரபு, கோபண்ணா உள்பட 40 பேர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு 2 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது பற்றியும், கட்சி உறுப்பினர் சேர்க்கை பற்றியும் விவாதிக்கப்படுகிறது.