தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடம் அதிருப்தி?
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக காங். கமிட்டிக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார். திருநாவுக்கரசரை தலைவராக நியமிக்க இளங்கோவன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக ஆதரவு நிலை
இந்த எதிர்ப்புகளை மீறி திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டது முதலே அதிமுகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் திருநாவுக்கரசர் கருத்துகளை கூறிவந்தார்.
இளங்கோவன் கடும் எதிர்ப்பு
இதனால் திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுகவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறார் திருநாவுக்கரசர். இதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
உச்சகட்ட மோதல்
இந்த மோதலின் உச்சமாக திருநாவுக்கரசர் யார் என இளங்கோவன் கேள்வி எழுப்பினார். திருநாவுக்கரசர் பதிலடியாக இரவு நேரத்திலா அப்படி இளங்கோவன் கேள்வி கேட்டார் என கூறினார். இது தொடர்பாக இருதரப்புமே டெல்லி மேலிடத்துக்கு புகார்களை அனுப்பி வந்தது.
விரைவில் மாற்றம்?
தற்போது திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு மாதங்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.