உள்ளாட்சி தேர்தல் மோதல்: திமுகவுடன் காங். கூட்டணி தொடரும்- சோனியாவை சந்தித்த கேஎஸ் அழகிரி அறிவிப்பு
சென்னை: திமுகவுடனான கூட்டணி தொடருவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக மீது குற்றம்சாட்டி கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது திமுக தரப்பை கடும் கோபம் அடைய செய்திருந்தது.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம்
திமுக திடீர் புறக்கணிப்பு
திமுக மீது பகிரங்கமாக காங்கிரஸ் குற்றம்சாட்டியதை அக்கட்சி ரசிக்கவில்லை. இதனை வெளிப்படுத்தும் விதமாக டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டிய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது.
சிஏஏ ஆலோசனை
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திமுகவும் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
டி.ஆர். பாலு புறக்கணிப்பு
இத்தனைக்கும் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் .பாலு டெல்லியில் இருந்த போதும் காங்கிரஸின் கூட்டத்தை அவர் புறக்கணித்தார். இது தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
டி.ஆர். பாலு விளக்கம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ஆர். பாலு, திமுகவினர் மீது அதிருப்தி இருந்தால் அதை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் நேரில் அழகிரி சொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அறிக்கை வெளியிட்டது சரியல்ல என சுட்டிக்காட்டியிருந்தார்.
சோனியாவுடன் அழகிரி ஆலோசனை
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்து பேசினார். இதில் திமுகவுடனான பிரச்சனை குறித்து சோனியாவிடம் கே.எஸ். அழகிரி விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
திமுக-காங். கூட்டணி நீடிக்கும்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்து சோனியாவுடன் ஆலோசனை நடத்தினேன். திமுகவும் காங்கிரஸும் இணைந்த கரங்கள். எங்கள் கூட்டணி தொடரும். கூட்டணி என்றால் ஒருசில வருத்தங்கள் இருக்கும். அது கூட்டணியை பாதிக்காது என்றார்.