மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: மின் வாரியம் அறிவிப்பு
சென்னை: மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதித் தேதியை ஒருவாரம் நீட்டித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுப்பதற்காகவும் மோடி எடுத்த இந்த அதிரடி முடிவால் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் கையில் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத சூழலில் மக்கள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதித் தேதியை தமிழக மின்சார வாரியம் ஒரு வார காலத்திற்கு நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "பொது மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கான கெடு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் ஒரு வாரம் கழித்து வரும் 16-ம் தேதிக்குள் செலுத்தலாம். அதேபோல் 30-ம் தேதி செலுத்த வேண்டியவர்கள் டிசம்பர் 7-ம் தேதிக்குள் செலுத்தலாம்" என்று தெரிவித்துள்ளது.