புத்தாண்டுக்கு சிக்கல்.. டிசம்பர் 29ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் டிசம்பர் 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பல்வேறு ஊர்களுக்குப் போக திட்டமிட்டுள்ளோருக்கு பீதி ஏற்பட்டுள்ளது.
தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட 11 போக்குவரத்து சங்கங்கள் இந்த அறிப்பை வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான 11 ஊதிய ஒப்பந்தம் கடந்த 30.8.2013ல் முடிவடைந்தது. தொடர்ந்து 1.9.2013ல் இருந்து 12வது ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை தமிழக அரசு இதற்கான பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என கூறி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்பட 11 சங்கங்கள் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி அனைத்து போக்குவரத்து அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. சென்னையில் பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.
மேலும் டிசம்பர் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடுவோம் எனவும் அறிவித்தனர். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக வேலைநிறுத்த போராட்டம் பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொமுச அலுவலகத்தில் 11 சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் தொமுச தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் சண்முகம், சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் 12வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29 ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சிஐடியு (போக்குவரத்து) மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காமல் அலட்சியம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே ஊதியம் ஒப்பந்தம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது என 11 சங்கங்களும் ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கான விளக்கக் கூட்டம் 26ம் தேதி சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலாளர்களும் பங்கு கொள்வதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.
இந்த ஸ்டிரைக் அறிவிப்பால், டிசம்பர் 29ம் தேதிக்குப் பிறகு ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக ஊர்களுக்குப் போகத் திட்டமிட்டுள்ளோர் சற்றே பீதியடைந்துள்ளனர்.