தமிழ்நாடு பிரிமீயர் லீக் நாளை தொடக்கம்... தொடக்கவிழாவில் நடிகர், நடிககைளில் கலைநிகழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நாளை முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டிஎன்பில் கோப்பையை, இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் டோணி சென்னையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு, தேசிய அளவிலான டி 20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும், கிராமங்களில் உள்ள வீரர்களுக்கு டி 20 அளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.
ஐபிஎல் பாணியில் நடைபெறும் இந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி, சேப்பாக்கம், கோவை, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மற்றும் காரைக்குடி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில், திண்டுக்கல் அணி ரவிச்சந்திரன் அஸ்வினையும், தூத்துக்குடி அணி தினேஷ் கார்த்திக்கையும், கோவை அணி முரளி விஜயையும், காரைக்குடி அணி பத்ரிநாத்தையும் வசப்படுத்தியுள்ளன. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய 3 இடங்களில் மொத்தம் 31 போட்டிகள் நடைபெறுகிறது.
தொடக்க விழா நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது. நடிகர்கள் தனுஷ், மாதவன், நடிகைகள் எமி ஜாக்சன், ஆன்ட்ரியா, தன்ஷிகா, பாடகர் கார்த்தி, இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ஆடல், பாடல் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி 30 நிமிட நேரம் நடைபெறும்.
இதையடுத்து, தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் முதல் ஆட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்.டி., விஜய் சூப்பர் ஆகிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.