தேர்வு விதிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை... டிஎன்பிஎஸ்சி புது விளக்கம்
பிற மாநிலத்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும் விதி முன்பில் இருந்து இருக்கிறது என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பிற மாநிலத்தவர்களை எழுத அனுமதிக்கும் விதி முன்பில் இருந்து இருக்கிறது என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரம் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது. டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவுப்பு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் வெளிமாநிலத்தவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான சட்டம் 2016-ன் பிரிவில் எவ்வித மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் நடந்த தேர்வுகளில் 30,098 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்று இருக்கின்றனர். இதில் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே எப்போதும் டிஎன்பிஎஸ்சி அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.