குரூப் 2 தேர்வு... தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. இதில் சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1241 இடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான முதல் நிலைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு ஒரு மணி வரை நடந்தது. 1511 மையங்களில் சுமார் 6 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
சென்னையில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மேல் நிலைப்பள்ளி, உள்ளிட்ட 199 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறாத வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. ஏற்பாடு செய்திருந்தது. தேர்வு மையங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேற்பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலகிருஷ்ணன் (பொறுப்பு) ரோசரி மேல் நிலைப்பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள், கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணிக்கப் பட்டது. தேர்வு மையங்களில் இவர்கள் திடீர் சோதனைகளும் மேற்கொண்டனர்.
இன்று நடைபெற்ற முதல் கட்ட எழுத்துத் தேர்வில் இருந்து ஒரு காலியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டு நேர்காணலுக்கு அழைக்கப் படுவர்.
இவர்களில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்காணல் மதிப்பெண் ஆகியவற்றை சேர்த்து இட ஒதுக்கீடு அடிப்படையில் தர வரிசை பட்டியல் தயார் செய்யப்படும். அவற்றில் தேர்வு செய்யப் படுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப் படும்.
இந்தத் தேர்வு முடிவுகள் 3 மாத காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் அதற்கு முன்னதாக விடைகள் டி.என்.பி.எஸ்.சி இணைய தளத்தில் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.