டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: 10 லட்சம் பேர் தேர்வு எழுதினார்.. 2 லட்சம் பேர் ஆப்சென்ட்
சென்னை: ஞாயிறன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். விண்ணப்பித்தவர்களில் 2 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியில் வருகின்றன.
இந்த ஆண்டு குரூப்-4 பணிகளில் 4,963 இடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு 11 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. விண்ணப்பித்தவர்களில் 9 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். ஒரு லட்சத்து 87 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை.
4,448 தேர்வுக் கூடங்கள்
ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு மையம் என்ற அளவில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை போன்ற பெருநகரங்கள் மூன்று பிரிவுகளாக தெற்கு, வடக்கு, மத்தி என மூன்றாகப் பிரிக்கப்பட்டு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பறக்கும் படை
இந்தத் தேர்வுப் பணிக்கென 4,448 முதன்மை கண்காணிப்பாளர்கள், 63,665 தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள், 457 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
10 லட்சம் பேர்
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. மொத்தம் 244 மையங்களுக்கு உள்பட்ட 4,448 தேர்வுக் கூடங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதாவது விண்ணப்பித்தவர்களில் 84 சதவீதம் பேர் தேர்வெழுதினர்.
சிசிடிவி கேமரா கண்காணிப்பு
பதற்றத்திற்குரிய தேர்வு மையங்கள் இணையதளம் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டன. தேர்வுக் கூடங்களின் நடவடிக்கைகள் விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன.
90 மதிப்பெண்கள்
இந்தத் தேர்வில் பொதுஅறிவு, திறனறிவு பிரிவில் 100 கேள்விகளும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் அளிக்கப்படும். குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களாக 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரொம்ப ஈஸி கேள்விகள்
பொதுத் தமிழ் பிரிவில் உலகின் எட்டாவது அதிசயம் என பாராட்டப்படுபவர் யார், தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நூல் எது, ஏற்றுமதி-இறக்குமதி குறித்து கூறும் நூல்கள் எவை உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
பொது அறிவு கேள்வி
பொது அறிவுப் பிரிவில் சிட்டிசன் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது உள்ளிட்ட கேள்விகளும், வரலாறு பிரிவிலிருந்து மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் போன்ற எளிமையான கேள்விகளும் இடம்பெற்றிருந்ததாக தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் லேசுதான்
கணிதத்தைப் பொருத்தவரை ஒரு சில கேள்விகளைத் தவிர மற்றவை அனைத்துக்கும் சுலபமாக பதிலளிக்க முடிந்தது. நடப்பு விவகாரங்கள் குறித்து அதிகளவு கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் சில கேள்விகளே கேட்கப்பட்டிருந்தது ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது குரூப் 4 தேர்வு எளிதாக இருந்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
லட்சக்கணக்காண விண்ணப்பம்
இந்த தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த விண்ணப்பித்தவர்களில் 2 லட்சம்பேர் தேர்வு எழுத வரவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
இரண்டரை மாதத்தில் தேர்வு முடிவுகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தேர்வுகளுக்குரிய விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் இரண்டரை மாதத்தில் வெளியிடப்படும் என்றார்.