டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவடைந்தது... அரசுப் பணி கனவுடன் 20 லட்சம் பேர் தேர்வு முடிவுக்காக வெயிட்டிங்!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் 6,962 மையங்களில் தொடங்கின.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 10 மணி தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. முதல் முறையாக 20 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4, குரூப் 1, குரூப் 2 , விஏஓ, இந்து அறநிலையத் துறை பணி ஆகியவற்றுக்கான தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்கிறது. அந்த வகையில் குரூப் 4 பதவியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுத 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தகுதி பெற்றனர். இந்தத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 3 மணி நேரம் நடைபெற்ற தேர்வு மதியம் 1 மணிக்கு முடிந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 6,962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
அனைத்து தேர்வுக் கூடங்களும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வில் எத்தனை கேள்விகளுக்கு தேர்வர் பதில் அளிக்கவில்லை என்றால் அதை கணக்கிட்டு குறிப்பிடும் தனி கட்டம் விடைத்தாளில் அறிமுகப்படுத்தப்பட்டது. கைபேசி, கால்குலேட்டர் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை.
முதல்முறையாக தேர்வரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் விடைத்தாளில் அச்சிடப்பட்டது. சென்னையில் மட்டும் 608 மையங்களில் 1.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்ததை அடுத்து இந்த தேர்வில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வினாத் தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.