நாளை குரூப் 4 தேர்வு- வீடியோவில் கண்காணிக்க தேர்வுத் துறை உத்தரவு
நெல்லை: தமிழகத்தில் நாளை குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதை முழுவதும் வீடியோவில் பதிவு செய்ய தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
குரூப் 4 எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நாளை 21 ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வினாத்தாள் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் அனைத்து மாவட்ட கருவூலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்வை அமைதியாக நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் கேட்டு கொண்டுள்ளது. இந்த தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் அலுவலர்களுடன் ஆலோசனை நடந்தது.
இந்த தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் காலை 9.30 மணிக்கே தேர்வு கூடத்தில் ஆஜராக வேண்டும். தேர்வர்கள் தவிர வேறு நபர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து தேர்வு மையங்களையும் ஆன்லைன் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெறும். இந்த தேர்வை எழுதுவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர், தடையில்லா மின்சார வசதி போன்றவையும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.