டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வந்துருச்சு.. 164 பேர் தேர்ச்சி !
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 164 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் இந்த முடிவுகளைக் காணலாம்.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 79 பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் பல்வேறு காரணங்களால் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில், டி.எஸ்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. இதில், 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
தேர்ச்சி பெற்ற 164 பேரும் ஆன்லைன் விண்ணப்பங்களில் குறிப்பிட்ட தகுதிகளை நிரூபிக்கும் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் சென்னை பார்க் டவுன், பிரேசர் பாலச் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.