டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைது
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறைகேடுகள் தொடர்பாக தலைமறைவாக ஆயுதப் படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பிற தேர்வுகளிலும் ஏராளமான முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக பலரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகள் மூலம் தமது குடும்பத்தினர் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கும் ஆயுதப் படை காவலர் சித்தாண்டி வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சித்தாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்த சித்தாண்டியும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். சித்தாண்டி சிக்கியிருப்பதன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் எப்படியெல்லாம் நடந்தன என்பது வெட்ட வெளிச்சமாகும் என தெரிகிறது.