டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நீக்கம்.. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு: வைகை செல்வன்
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரையும் நீக்கம் செய்து ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய போவதாக வைகை செல்வன் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக அதிமுக அனுதாபிகள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பாமக, திமுக,புதிய தமிழகம் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 11 பேர் நியமனம் ரத்து என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் மூலம், ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேர் பதவியிழந்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பேச்சாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கூறுகையில், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
அதே நேரம், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியொன்றில், தமிழக அரசு, ஹைகோர்ட் வழங்கிய உத்தரவை ஏற்று நடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.