813 காலி இடங்கள்... 7,70,860 பேர் எழுதிய விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான (விஏஒ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 813 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 7,70,860 பேர் எழுதினர்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான (விஏஒ) தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலையும், சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.