”சப் கலெக்டர்” உட்பட 74 உயர்பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு - டி.என்.பி.எஸ்.சி நாளை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நிரப்பப்பட உள்ள 74 உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்ந்து எடுத்து கொடுக்க தமிழக அரசு அந்த பொறுப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்துள்ளது.
அதன்படி சிவில் நீதிபதிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி.கள், உதவி வணிக வரித்துறை அலுவலர்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள், வருவாய் உதவியாளர்கள், பதிவாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி ஆட்களை தேர்ந்து எடுத்து வருகிறது.
இந்த நிலையில் குரூப் 1 தேர்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது. துணை கலெக்டர் பணியிடங்கள்- 19, துணை சூப்பிரண்ட் பணியிடங்கள்- 26, உதவி வணிக வரித்துறை அலுவலர்கள் பணியிடங்கள்- 21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
முதன்மையாக முதல்நிலை தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வும் நடத்தப்படும்.
அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்து எடுத்து அறிவிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 மெயின் தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் நடத்தியது.
இப்பதவிகளுக்கான நேர்காணல் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 2-ந் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நேர்காணல் நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புகடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு தபால் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளது''என்று தெரிவித்துள்ளார்.