மதுரை: டார்ச்சர் செய்த அதிகாரியை தீக்குளித்து கட்டிப்பிடிக்க முயன்ற அரசு பஸ் டிரைவர்
மதுரை: மதுரையில் தன்னை கொடுமைப்படுத்தி வந்த போக்குவரத்து அதிகாரியை கட்டிப்பிடித்து அரசு பேருந்து டிரைவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
அரசு போக்குவரத்து டிரைவர்கள் அதிலும் மதுரை கிளையைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்படுவதாகவும் அதை ஏற்க மறுத்தால் பணிநீக்கம், வேறு கிளைக்கு மாற்றம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மதுரை கிளை மேலாளர் தயாளகிருஷ்ணன் தான் டிரைவர்களுக்கு கூடுதல் பணியை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் டிரைவர் செந்தில்குமார் மற்றும் கண்டக்டர் சரவணன் ஆகியோர் பகல் 1 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் கிளம்பினர். இரவு 9.30 மணிக்கு பணி முடிந்த பிறகு செந்தில் பேருந்தை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தினார். அப்போது தயாளகிருஷ்ணன் செந்தில் மற்றும் சரவணனை திருச்சிக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவர்கள் மறுக்கவே பெரியார் பேருந்து நிலையம் வரை ட்ரிப் அடிக்குமாறு கூறியுள்ளார்.
அவர்களும் பெரியார் பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் மாட்டுத்தாவணியில் பேருந்தை நிறுத்தும்போது மணி 12.30 ஆகிவிட்டது. அதன் பிறகும் அவர்களை திருச்சிக்கு செல்லுமாறு தயாளகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தயாளகிருஷ்ணன், செந்தில், சரவணன் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவர் செந்திலை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில் பங்கில் பெட்ரோல் வாங்கி அதை தனது உடலில் ஊற்றி தீ வைத்து தயாளகிருஷ்ணனை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்த தயாளகிருஷ்ணன் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார். அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் செந்திலின் உடலில் எரிந்த தீயை அணைத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து பேருந்துகளை இயக்க மறுப்பு தெரிவித்து அனைத்து ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தயாளகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து சிஐடியு பொதுச் செயலாளர் வாசுதேவன் கூறுகையில்,
கூடுதலாக ட்ரிப் அடிக்கையில் அதிகாரிக்கு பேருந்து ஒன்றுக்கு ரூ.250 கமிஷன் கிடைக்கும். அந்த கமிஷனுக்கு ஆசைப்பட்டு டவுன் பேருந்துகளை வேறு ஊர்களுக்கு இயக்கக் கூடாது என்ற விதியையும் மீறி இயக்கச் சொல்கிறார்கள். வேலைப்பளுவால் தற்கொலைக்கு முயன்ற செந்திலின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.