வருகிறது தீபாவளி... 3 நாள் சிறப்பு பேருந்துகள்.. 5 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள்.. அரசு அறிவிப்பு #diwali
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து புறப்படும் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நினைப்பவர்களுக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயண நேரமும் வீணாகிறது. இதனையடுத்து இந்த ஆண்டு 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
• செங்குன்றம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் அண்ணா நகர் மேற்கில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
• கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் 100 அடி சாலையில் மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
• திண்டிவனம், வி்க்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
• வேலூர், தரும்புரி போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
• தென்மாவட்டங்கள் இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் 26ம்தேதி முதல் 28ம்தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் செய்யலாம்.
• கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை வெளி சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பஸ்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
• கார் மற்றும் இதரவாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.